திருப்பத்தூர்: சாலையோரம் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல் - 3 பேர் உயிரிழப்பு


திருப்பத்தூர்: சாலையோரம் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
x

நாட்டறம்பள்ளி அருகே சாலையோரம் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர்கள் தீனா (வயது 28). இவரது நண்பர்கள் மதன் குமார்( 23) சரவணன் (19), ஜெகன் ( 26), கோபால் (16) மற்றும் சந்தோஷ் ( 23) ஆகியோர் இன்று காலை தங்களுக்கு சொந்தமான 2 காளை எருதுகளுடன் கிருஷ்ணகிரி அருகே மேல்மலை கிராமத்தில் நடைபெறும் எருது விடும் விழாவில் பங்கேற்க சரக்கு வேனில் சென்றனர். சரக்கு வேனை நாகராஜன் (வயது 23) என்பவர் ஒட்டி சென்றார்.

இவர்கள் எருது விடும் விழாவில் பங்கேற்றவிட்டு டிரைவர் உள்பட 7 பேர் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்‌. அப்போது நாட்டறம்பள்ளி அருகே சென்று கொண்டு இருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டு இருந்த டேங்கர் லாரி மீது சரக்கு வேன் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் நாகராஜன் மற்றும் முன் பக்கம் அமர்ந்து இருந்த தீனா, மதன் குமார் ஆகிய 3 பேர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் சரவணன், ஜெகன், கோபால், சந்தோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர் .

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேர் சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கோர விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story