திருப்பத்தூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியல்


திருப்பத்தூர்:  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியல்
x

உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம், உதயேந்திரம் அருகே உள்ள சுப்பராயன் கோவில் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்ற கர்ப்பிணிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரை உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் மற்றும் நர்சுகள் சேர்ந்து பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து சசிரேகா உடல்நிலை மோசமானது. அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சசிரேகாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தவறான சிகிச்சை அளித்ததால் சசிரேகா உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மேலும், உதயேந்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சசிரேகாவை பிரசவத்திற்காக சேர்த்த போது அங்கிருந்த ஊழியர்கள் ரூ.2000 லஞ்சம் கேட்டனர். பணம் கொடுத்த பிறகுதான் பிரசவத்திற்கு அனுமதித்தனர் என அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து உதயேந்திரம் வாணியம்பாடி சாலையில் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டம் செய்தனர். இது பற்றி தகவல் அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி மற்றும் வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story