செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு; மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரிக்கை


செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு; மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரிக்கை
x

செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

திருவள்ளூர்

போராட்டம்

சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையத்திலிருந்து செவ்வாப்பேட்டை, திருவூர், அரண்வாயல், அரண்வாயல் குப்பம், கொப்பூர், வெள்ளேரித்தாங்கள், பாப்பரம்பாக்கம், தொழுவூர், தண்ணீர்குளம், சிறுகடல், அயத்தூர், தொட்டிக்கலை, கிளாம்பாக்கம் என 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினந்தோறும் ரெயில் மூலம் சென்னை, அரக்கோணம், திருத்தணி போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். ஆவடி சாலையுடன் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் ரெயில் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பணி முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 18-ந் தேதியன்று செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் பயணிகள் உட்பட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனடியாக முடித்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆய்வு

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, சப்-கலெக்டர் மகாபாரதி ஆகியோர் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இங்கிருந்த ரெயில் பணிகள் மற்றும் திரளான பொதுமக்கள் செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன் அருகே உள்ள சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். ஆய்வின் போது திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய குழு துணை தலைவர் பர்க்கத்துல்லா கான், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரேம் ஆனந்த், மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story