திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில்காத்திருப்பு போராட்டம்


திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில்காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2023 6:45 PM GMT (Updated: 27 Jun 2023 6:45 PM GMT)

ுறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திருவாரூர்

முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

காத்திருப்பு போராட்டம்

முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விடக்கோரி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.அப்போது அங்குவந்த மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பாலசந்தர் (பொது), ஏழுமலை (வேளாண்மை) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்பட அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாலை 6 மணி அளவில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பேட்டி

இதை தொடர்ந்து பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 5 லட்சம் ஏக்கரில் நேரடி விதைப்பு முறையில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் வாய்க்கால்களுக்கு தண்ணீர் சரிவர வராததால் வயல்களில் தெளித்த விதைகள் கருக தொடங்கி விட்டன. இதை பார்த்து விவசாயிகள் மனமுடைந்து தவித்துவருகின்றனர்.

தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி ஜூன் மாத ஒதுக்கீட்டான 9.1 டி.எம்.சி. தண்ணீரை பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கான நடவடிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கவில்லை. கடந்த 12-ந்தேதி மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு செல்லாததால் விலைநிலங்கள் தரிசாக கிடக்கிறது. 18 ஆயிரம் கன அடி தண்ணீரை உடனே விடுவிக்க வேண்டும். உள்பாசன முறை வைப்பதை கைவிட வேண்டும். முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட்டு பயிர்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை மனு

முன்னதாக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை சாகுபடி தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் ஆறுகளில் சரியான முறையில் தண்ணீர் வரவில்லை. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர் . எனவே உடனடியாக மேட்டூரில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீரை திறக்க வேண்டும். அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் வரை உள் பாசன முறையை கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி ஜூன் மாதத்திற்கு தமிழகத்துக்கு தர வேண்டிய 9.1 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்க தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்திடம், விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.


Next Story