10 நாட்கள் சுற்றுப்பயணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார்


10 நாட்கள் சுற்றுப்பயணம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஸ்பெயின் புறப்படுகிறார்
x
தினத்தந்தி 27 Jan 2024 1:21 AM GMT (Updated: 27 Jan 2024 4:48 AM GMT)

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) இரவு ஸ்பெயின் புறப்படுகிறார்.

சென்னை,

இந்தியாவில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டு வருகிறது. இதற்காக அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டில் உள்ள முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கவும், அதன் மூலம் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 7, 8-ந் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரூ.6 லட்சத்து 64 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 27 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று (சனிக்கிழமை) இரவு வெளிநாடு புறப்படுகிறார்.

இதற்காக இரவு 9.45 மணிக்கு விமானம் மூலம் துபாய் புறப்படுகிறார். பின்னர், அங்கிருந்து சுவீடனுக்கு செல்கிறார். அதன்பிறகு ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள், வெளிநாட்டு அரசு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரை அவர் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது. இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அவர் வருகிற பிப்ரவரி 7-ந் தேதி சென்னை திரும்புகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த 10 நாட்கள் சுற்றுப்பயணத்தில், தமிழகத்துக்கு மேலும் பல வெளிநாட்டு முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


Next Story