'ஒரே நாடு ஒரே தேர்தல்' மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


ஒரே நாடு ஒரே தேர்தல் மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Sep 2023 12:00 AM GMT (Updated: 4 Sep 2023 12:01 AM GMT)

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலமாக அதிபர் ஆட்சியை கொண்டு வர சதி நடப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு ஒரே தே்ாதல்' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

திருமண விழா

இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் பேசியதாவது:-

பயம் வந்துவிட்டது

அறிஞர் அண்ணா ஒரு குடும்பப் பாச உணர்வோடு இந்த இயக்கத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார். ஆனால் இது சிலருக்கு இன்றைக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. இன்றைக்கு நாட்டிற்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நீங்கள் எல்லாம் உணர்ந்து பார்க்க வேண்டும். எவ்வாறு சட்டமன்ற தேர்தல் நடந்தபோது தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு சிறப்பான வெற்றியை தி.மு.க.வுக்கும், கூட்டணிக்கும் ஏற்படுத்தி கொடுத்தீர்களோ, அதேபோல் இந்தியாவை காப்பாற்றுவதற்கு ஒரு அவசியம் ஏற்பட்டிருக்கிறது.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன், யார் பிரதமராக வர வேண்டும்? யார் ஆட்சிக்கு வர வேண்டும்? என்பதல்ல, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம்முடைய லட்சியமாக, நோக்கமாக இருக்க வேண்டும். இந்தியா என்று சொன்னாலே நிறைய பேருக்கு பயம் ஆகிவிட்டது. அதிலும் பாரதீய ஜனதா கட்சிக்கு அச்சமே ஏற்பட்டிருக்கிறது. இந்தியா என்ற பெயரை சொல்வதற்கே கூச்சப்படுகிறார்கள், அச்சப்படுகிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

இந்தியா கூட்டணி அமைத்து, அதற்கென்று சில குழுக்கள் எல்லாம் கூட அமைக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். எனவே இதையெல்லாம் பார்த்து அஞ்சி, நடுங்கி இன்றைக்கு பா.ஜ.க. என்ன செய்திருக்கிறது என்று சொன்னால் திடீரென்று நாடாளுமன்றத்தை கூட்டப்போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

'ஒரே நாடு - ஒரே தேர்தல்' என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த 'ஒரே நாடு, ஒரே தேர்தலை' எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவிற்கு யார் தலைவர் என்றால், ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவரை தலைவராக போட்டிருக்கிறார்கள். மரபை தாண்டி இன்றைக்கு கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள். உறுப்பினர்களிலாவது எல்லா கட்சியும் கலந்து, கேட்டு போட்டார்களா என்றால் அதுவும் கிடையாது.

தி.மு.க. இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தி.மு.க.வின் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்றால் கிடையாது. எனவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பேரை போட்டு, அவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆட்சியை கலைத்து விடுவார்களா?

அ.தி.மு.க.,- ஆளுங்கட்சியாக இருந்தபோது அந்த கொள்கையை எதிர்த்தார்கள். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறபோது, தி.மு.க. ஆளுங்கட்சியாக இருக்கிறபோது, அதை அ.தி.மு.க. ஆதரிக்கிறது. தாம் பலிகடா ஆகப்போகிறது என்று ஆட்டுக்கு தெரியாது. அதனால் அ.தி.மு.க. பலிகடா ஆகப்போகிறது. இந்த சட்டம் நிறைவேறினால், தி.மு.க. மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே 'ஒன்மேன் ஷோ' ஆகிவிடும். 'ஒரே நாடு - ஒரே தலைவர்', அதிபர் என்று அவரே அறிவித்து விடலாம். எனவே தேர்தலே கிடையாது. ஒரே நேரத்தில் ஒரே தேர்தல்தான் வைக்கப்போகிறோம் என்று சொல்கிறார்கள்.

2021-ல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடந்து, நாம் ஆட்சிக்கு வந்து 2½ ஆண்டு் ஆகிறது. இன்னும் 2½ வருடம் இருக்கிறது. எனவே நாடாளுமன்ற தேர்தல் வருகிறபோது, ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த ஆட்சியைக் கலைத்து விடுவீர்களா?.

நாம் மட்டுமா?, பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம். அதேபோல மேற்கு வங்காளம். அங்கெல்லாம் கலைத்து விடுவீர்களா? அவர்களுக்கெல்லாம் இன்னும் 2½ வருடத்திற்கு மேல் ஆட்சி இருக்கிறது. ஏன் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கர்நாடக மாநிலம். அங்கு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்திருக்கிறது. எனவே அந்த ஆட்சியை கலைத்து விடுவீர்களா?.

சதித்திட்டம்

சரி, அதுதான் போகட்டும். ஒரே நேரத்தில் தேர்தல் வைக்கிறீர்கள். அப்படி நாடாளுமன்றத்தோடு சட்டமன்றங்களுக்கும் தேர்தல் வைத்து, எங்காவது ஒரு மாநிலத்தில் 'மெஜாரிட்டி' வராமல் போய்விட்டது என்றால், ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது என்றால் அப்போது என்ன செய்வீர்கள்? மறுபடியும் அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரும் வரை அந்த தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி ஆட்சி நடத்தப்போகிறீர்களா?.

எனவே இப்படி ஒரு அசிங்கமான, கேவலமான ஒரு சதித்திட்டத்தை தீட்டி, எனவே ஒரு அதிபராக தான் இருக்க வேண்டும் என்பதற்காக இன்றைக்கு அந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

7.5 லட்சம் கோடி முறைகேடு. ஆதாரங்களோடு சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு இதுவரை பதில் சொல்ல முடியாத நிலையில் ஒரு பிரதமர் இருக்கிறார் என்று சொன்னால், இப்படிப்பட்ட இந்த கொடுமையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியும், சபதமும் 'இந்தியாவைக் காப்பாற்ற நாம் இன்றைக்கு தயாராக இருக்க வேண்டும்' என்பதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story