காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவிட வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி


காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவிட வேண்டும்- எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி
x

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து கட்சி கூட்டம் நடத்தி வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என மதுரையில் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.

மதுரை



ஆலோசனை கூட்டம்

எஸ்.டி.பி.ஐ. சார்பில் வருகிற டிசம்பர் மாதம் மதுரையில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற தலைப்பில் மாநாடு நடக்க இருக்கிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:- மதச்சார்பின்மை இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. வட மாநிலங்களில் தினமும் கலவரங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. எஸ்.டி.பி.ஐ. சார்பில் டிசம்பர் மாதம் மதுரையில் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற முழக்கத்தோடு மாநாடு நடக்க உள்ளது. இதில் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தின் பல மாவட்டங்களில் உள்ள அரபி மதராசக்களை குறி வைத்து என்.ஐ.ஏ. சோதனை செய்து வருகிறது. இதை எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டிக்கிறது. இதில் தலையிட்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தமிழக அரசு வலுவான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கட்சி பாகுபாடின்றி போராடும் எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்க வேண்டும். காவிரி தண்ணீர் என்பது தமிழகத்தின் உரிமை. அதனை விட்டுக்கொடுக்கக்கூடாது. வலுவான எதிர்ப்பை தெரிவித்தால் தான் காவிரி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பா.ஜ.க. மதவாதம் வீழ்த்த பட வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் மிகவும் ஆபத்து. பா.ஜ.க. கொண்டு வரும் எந்த திட்டமும் மக்களுக்கான திட்டம் கிடையாது. கவர்னர் ஆர்.என். ரவி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழல். அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நீண்டநாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய அல்லது பரோலில் விட தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story