தற்கொலை செய்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.9½ லட்சம் நிதி உதவி


தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:46 PM GMT)

தற்கொலை செய்த நாகை போலீஸ்காரரின் குடும்பத்திற்கு, அவருடன் 2016-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் ரூ.9½ லட்சம் நிதி திரட்டி வழங்கினர்.

நாகப்பட்டினம்


தற்கொலை செய்த நாகை போலீஸ்காரரின் குடும்பத்திற்கு, அவருடன் 2016-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த போலீசார் வாட்ஸ்-அப் குழு மூலம் ரூ.9½ லட்சம் நிதி திரட்டி வழங்கினர்.

2-ம் நிலை காவலர்

நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த சந்தன மாரிமுத்து என்பவரது மகன் பிரவீன்குமார் (வயது 29). இவர் 2016-ம் ஆண்டு மன்னார்குடி போலீஸ் நிலையத்தில் 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

அதைதொடர்ந்து 2016-ம் ஆண்டு இவருடன் பணிக்கு சேர்ந்த போலீசார் ஒன்றிணைந்து பிரேம்குமார் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க முடிவு செய்தனர். அதன்படி சுமார் 8 ஆயிரத்து 500 போலீசார் ஒன்று சேர்ந்து '2016 பேட்ஜ் காக்கும் கரங்கள்' என்ற வாட்ஸ்-அப் குழுவை தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டினர்

ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிதி

இந்த வாட்ஸ் அப் குழுவின் மூலம் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் நிதியை திரட்டி அதை பிரவீன்குமாரின் குடும்பத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில் நிதி உதவிக்கான காசோலையினை உயிரிழந்த போலீஸ் பிரவீன்குமாரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதே போல் அசாதாரமான சூழ்நிலையில் உயிரிழந்த 12 போலீசாரின் குடும்பத்திற்கு 2016 பேட்ஜ் காக்கும் கரங்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் ரூ.1 கோடியே 50 லட்சத்து 34 ஆயிரத்து 954 நிதி திரட்டி ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story