கொட்டித் தீர்க்கும் கனமழை: தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்கள் மதுரையில் தரையிறக்கம்


கொட்டித் தீர்க்கும் கனமழை: தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானங்கள் மதுரையில் தரையிறக்கம்
x
தினத்தந்தி 17 Dec 2023 10:40 AM GMT (Updated: 17 Dec 2023 11:02 AM GMT)

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படியே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று முதலே விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. வெளுத்து வாங்கும் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், தூத்துக்குடியில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடி செல்ல வேண்டிய 2 விமானங்கள் மதுரையில் தரையிறங்கின.



Next Story