கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 5 பேர் படுகாயம்


கோத்தகிரி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து - 5 பேர் படுகாயம்
x

கோத்தகிரி அருகே ஊட்டிக்கு சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து ஏற்ப்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பகுதியைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் உள்பட 13 பேர், நேற்று முன்தினம் அதிகாலை சுற்றுலா வேன் மூலம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வேனை திருப்பூர், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (வயது 27) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

அவர்கள் ஊட்டியில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுகளித்து விட்டு, நேற்று இரவு சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோத்தகிரி வழியாக சென்றுள்ளனர்.

அப்போது வேன் கட்டபெட்டு பஜார் பகுதியில் சென்றுக் கொண்டிருக்கும்போது, டிரைவர் பிரேக் போட முயற்சித்துள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மீது மோதியதுடன், 3 வதாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி கவிழ்ந்து விழுந்தது.




இதில் வேனுக்குள் இருந்த சுற்றுலாப் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடி வந்து அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் சத்யா (35), லாவண்யா (29), தியாகராஜன் (31), கலைச்செல்வி (50), அலமேலு (50) ஆகிய 5 பேருக்கு பலத்த காயம் ஏற்ப்பட்டது. அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் வேனில் பயணம் செய்த சந்தியா (17), சேகர் (43), சிவானி (6), தினேஷ் குமார் (18), விஷால் (16), நிரஞ்சன் (7), ஜெயசுதாகர் (48), லசித்தா (10) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் அனைவரும் வெளி நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று சென்றனர்.

எப்பொழுதும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் அதிகமாகக் காணப்படும், கட்டபெட்டு பஜார் பகுதியில் இரவு நேரத்தில் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.




மேலும் வேன் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி கவிழ்ந்து நின்றதால், அருகிலிருந்த சுமார் 50 அடி பள்ளத்தில் விழாமல் பெரும்விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து சுற்றுலா வேன் டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story