ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதல்; 2 பெண்கள் பலி


ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதல்; 2 பெண்கள் பலி
x
தினத்தந்தி 20 Oct 2023 6:45 PM GMT (Updated: 20 Oct 2023 6:46 PM GMT)

பண்ருட்டி அருகே ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 100 நாள் வேலைக்கு சென்ற 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

கடலூர்

பண்ருட்டி

டிராக்டர் மோதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அரிசிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர்கள் கலைவாணன் மனைவி ஜெயலட்சுமி (வயது 30), நாகராஜ் மனைவி தாட்சாயிணி (49). 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களான இவர்கள் நேற்று காலை 10 மணிக்கு வேலைக்காக மேல்கவரப்பட்டுக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டனர். ஸ்கூட்டரை ஜெயலட்சுமி ஓட்டினார்.

அரிசி கவுண்டன்பாளையம் சாலையில் சென்ற போது, பின்னால் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர், ஸ்கூட்டரை முந்திச்செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து ஜெயலட்சுமியும், தாட்சாயிணியும் தவறி கீழே விழுந்து டிராக்டர் டிரெய்லர் சக்கரத்தில் சிக்கினர்.

இதில் சக்கரம் ஏறி இறங்கியதில் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயலட்சுமி, தாட்சாயிணி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

100 நாள் வேலைக்கு சென்ற 2 பெண் தொழிலாளர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story