ஈரோட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்


ஈரோட்டில் கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம்
x

வணிக நிலுவைக் கடன்களை விரைந்து வசூலிக்க ஏதுவாக கொண்டுவரப்பட்ட மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஈரோடு ஜவுளித் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு,

மத்திய அரசுக்கு எதிராக ஈரோட்டில் உள்ள ஜவுளி வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய அரசு வருமானவரி சட்டத்தில் 43B(h)-ஐ மாற்றம் செய்து கொண்டு வந்து உள்ளது. மார்ச் 31-ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தத்தின்படி, இருப்பு நிலை குறிப்பு கணக்கில் இருக்கும் வணிக கடன் நிலுவைகள் 45 நாட்களுக்கு மேலே சென்று இருந்தால் அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

இது சிறு, குறு தொழில்களை மட்டுமில்லாமல் ஜவுளி சார்ந்த துறைகளையும் பெரிதும் பாதிக்கும் என்பதால் அந்த துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த சட்டத்தை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு கிளாத் மெர்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் ஜவுளி வணிகர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி. ரோடு, மணிக்கூண்டு, திருவெங்கடம் வீதி, ஈஸ்வரன் கோவியோ வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தின் காரணமாக 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஜவுளி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் வணிகர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக விசைத்தறி உரிமையாளர்கள் 50,000 விசைத்தறிகளை ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்படி ஈரோடு, பள்ளிபாளையம் வெண்ணந்தூர், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 50 ஆயிரம் விசைத்தறிகள் இன்று ஒருநாள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான துணி உற்பத்தியும் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.

சிறு, குறு தொழில்களுக்கு மட்டுமன்றி கார்ப்பரேட், பிரைவேட் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இந்தச் சட்டத்தை ஒரே சீராக அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


Next Story