வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்: டயர் வெடித்து சொகுசு பஸ் கவிழ்ந்தது - 18 பேர் படுகாயம்


வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த சோகம்: டயர் வெடித்து சொகுசு பஸ் கவிழ்ந்தது - 18 பேர் படுகாயம்
x

சென்னையில் இருந்து புதுசேரிக்கு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது டயர் வெடித்து சொகுசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

செங்கல்பட்டு

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த சசிகலா (வயது 55). இவரது மகளுக்கு திருமணமாகி கணவருடன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தாயார் சசிகலா உறவினர்கள் 25 பேருடன் ஒரு சொகுசு பஸ்சில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி என்ற இடத்தில் பஸ் சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரம் மணல் பரப்பில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து அதில் பயணம் செய்த 8 பெண்கள் உள்பட 18 பேர் படுகாமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story