பெண் குழந்தை பிறந்ததால் விபரீதம் - தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை


பெண் குழந்தை பிறந்ததால் விபரீதம் - தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை
x

மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதைபார்க்க முரளியும், அவரது தாயாரும் சென்றுள்ளனர்.

ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் என்பவரின் மனைவி சிவகாமி(வயது 55) இவர் விவசாயம் செய்து வருகின்றனர்.

சிவகாமியின் கணவர் சேகர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மேலும் சந்தோஷ், சுதாகர், முரளி ஆகிய மூன்று மகன்களுடன் சிவகாமி வசித்துவந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சந்தோஷ், சுதாகர் ஆகிய 2 மகன்களும் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 3-வது மகனான முரளி (வயது 27) என்பவருக்கு கடந்த ஆண்டு இந்துஜா(20) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்துஜா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் கணவர் முரளி மற்றும் தாயார் சிவகாமி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பெண் குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த தாய், மகன் இருவரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் உயிரிழந்த தாய் சிவகாமி, மகன் முரளி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story