குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் திருநங்கைகள் திடீர் போராட்டம்

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் திருநங்கைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிஞ்சிப்பாடி,
குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்திற்கு, நேற்று திருநங்கைள் சிலர் கோவில் திருவிழாவுக்கு நன்கொடை வாங்குவதற்காக வந்திருந்தனர். அப்போது அலுவலகத்தின் முதல் தளத்தில் மன்ற கூட்டம் நடந்தது.
அங்கு சென்ற திருநங்கைகளை அங்கிருந்த சிலர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அலுவலகத்தில் உள்ள மாடிப் படியில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், சிதம்பரம் அருகே கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா வருகிற 30-ந்தேதி நடக்கிறது. விழாவிற்கு நிதி திரட்டுவதற்காக இங்கு வந்தோம். நாங்கள் மாடிக்கு சென்றபோது அங்கிருந்த சிலர் எங்களை தவறாக பேசி அவமரியாதை செய்தனர்.
இது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது என்று கூறி, அங்கிருந்த சென்றனர். இதுகுறித்து பேரூராட்சி செயலர் கிருஷ்ணனிடம் கேட்டபோது. மன்ற கூட்டத்தில் இருந்தேன். அவர்கள் வந்தது தெரியும், ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லை எனக் கூறினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.