ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின்தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கும் திட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.
ஊட்டச்சத்து பெட்டகம்
நாமக்கல் நகராட்சி போதுப்பட்டியில் உள்ள குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் ஊட்டச்சத்தை உறுதிசெய் என்கிற திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடக்கவிழா நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் முன்னோடி திட்டமான "ஊட்டச்சத்தை உறுதிசெய்" திட்டத்தின் நோக்கம் பிறந்தது முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகங்களும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 1 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவது ஆகும்.
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு 8 வாரங்களுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு போன்றவைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்துவதாகும்.
இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 மாதம் வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 365 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 730 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 738 குழந்தைகளின் தாய்மார்களுக்கு 738 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து பெட்டகம் தொகுப்பும் என மொத்தம் 1,468 ஊட்டச்சத்து பெட்டக தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
மேலும் 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1,227 குழந்தைகளுக்கு உடனடியாக உட்கொள்ளும் சிகிச்சை உணவு வகைகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலெக்டர் ஆய்வு
அதனைத்தொடர்ந்து போதுப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் போதுப்பட்டி, லக்கம்பாளையத்தில் உள்ள குழந்தைகள் மையத்தை நேரில் பார்வையிட்டு, குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள், குழந்தைகளுக்கு வழங்கும் இணை உணவு, குழந்தைகளின் கற்றல் திறன், குழந்தைகளுக்கு வழங்கும் உணவின் தரம், குழந்தைகள் மையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் கீதா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






