திருச்சி: ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் புதிய தகவல்


திருச்சி: ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் புதிய தகவல்
x

திருச்சியில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி,

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பலூன் வியாபாரி அனார் சிங்கை இன்று காலை போலீசார் கைது செய்தனர். அப்போது அனார் சிங் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

சோடியம், அலுமினியம் பவுடர்களை தண்ணீரில் கலந்து ஹீலியம் வாயு வீட்டிலேயே தயாரிப்பது தெரியவந்துள்ளது. இந்த வாயுவுக்கு 2 நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தண்ணீரில் கலந்து வாயு தயாரிக்கப்படுகிறது. 3-வது முறையாக தண்ணீர் கலப்பதற்காக தண்ணீர் எடுக்க சென்றபோது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வழக்கின் முழுவிவரம்:-

திருச்சி மெயின்கார்டு கேட் அருகே மேலிப்புலிவார்டு ரோட்டில் நேற்று இரவு 8.10 மணியளவில் ஒருவர் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் பலூனுக்கு காற்று நிரப்புவதற்காக வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதில் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் தூக்கி வீசப்பட்டார். வெடிச்சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். மேலும் வெடித்த கியாஸ் சிலிண்டர் அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ நசுங்கியது. அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

மேலும் வெடித்த சிலிண்டரின் பாகங்கள் சிதறியதில் ஒரு ஜவுளி கடையின் 'லிப்ட்' கண்ணாடிகள், கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மாநகர வடக்கு போலீஸ் துணை கமிஷனர் அன்பு, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதாலட்சுமி, ேகாட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த விபத்தில் இறந்தவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்ற மாட்டு ரவி(வயது 35) என்பது ெதரியவந்தது. மேலும் அப்பகுதியில் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தவர் வைத்திருந்த ஹீலியம் கியாஸ் சிலிண்டர் இருந்த இடத்தில், ரவி சிகரெட் குடித்தபோது ஏற்பட்ட தீப்பொறியால், கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story