தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
x

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 3-வது கட்டமாக நிவாரண பொருட்களை எம்.பி கனிமொழி கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

தூத்துக்குடி,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்படும் எனத் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் கடந்த மே மாதம் 18-ந்தேதி முதல் கட்டமாக ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த கப்பலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாகக் கடந்த மாதம் 22 ந் தேதி அன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் ரூ.67.70 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் டன் எடையுள்ள பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன.

இந்நிலையில் இன்று தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் இன்று தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ரூ.54 கோடி மதிப்பிலான 16,500 டன் அரிசி, ரூ.6 கோடி மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.14 கோடி மதிப்பிலான 50 டன் உயிர் காக்கும் மருந்துகள் என மொத்தம் ரூ.74 கோடி மதிப்பிலான 16,800 டன் எடையுள்ள பொருட்கள் கப்பலில் ஏற்றப்பட்டு தயாராக இருந்தது.

இதனை தொடர்ந்து நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு கொழும்பு துறைமுகத்துக்கு புறபட்டு சென்றது. இந்த கப்பலை, தூத்துக்குடி நாடாளுமன்ற எம்பி கனிமொழி கொடியசைத்து அனுப்பிவைத்தார்.


Next Story