மதுரை வழியாக இரண்டு புதிய ரெயில்கள் இயக்கம் - சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி


மதுரை வழியாக இரண்டு புதிய ரெயில்கள் இயக்கம் - சு.வெங்கடேசன் எம்.பி. நன்றி
x

மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரெயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரை,

மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றும் ராமேஸ்வரத்தில் இருந்து மங்களூருக்கு மதுரை வழியாக இரண்டு புதிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொடுத்த ரெயில்வே வாரியத்திற்கும், பரிந்துரை செய்த தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கும் நன்றி தெரிவிப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

"மதுரை மாவட்டத்திற்கு மேலும் இரு புதிய ரெயில்களை இயக்குவதற்கான கோரிக்கை வெற்றி அடைந்துள்ளது. கடந்த பிப்ரவரி 29-ந்தேதி தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதுரை வழியாக ரெயில் இயக்குவதற்கும், ராமேஸ்வரம் முதல் மங்களூர் வரை மதுரை வழியாக ரெயில் இயக்குவதற்கும் தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்து ரெயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக எனது கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது.

தென்மாவட்ட மக்களுக்கும், மேற்கு மாவட்ட மக்களுக்கும் மிகுந்த பயனளிக்கக் கூடிய இந்த ரெயில்களை இயக்க வேண்டும் என கடந்த 2022-ம் ஆண்டு முதல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன் விளைவாக தற்போது தெற்கு ரெயில்வே பரிந்துரைக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி ஒரு இரவு நேர ரெயில் தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கும் வாரம் இரு முறை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதைப்போல ராமேஸ்வரத்திற்கும் மங்களூருக்கும் இடையே வாரம் ஒரு முறை ரெயில் இயக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது மதுரை மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் மிக முக்கியமானது. கோவை ரெயில் பயணிகள் சங்கமும் மதுரை தூத்துக்குடி பகுதி மக்களும் ரயில்வே நிர்வாகத்திற்கு இக்கோரிக்கையை பலமுறை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்த இரு ரெயில்களுக்கும் ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து, விரைவில் அவை தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிக் கொடுத்த ரெயில்வே வாரியத்திற்கும், பரிந்துரை செய்த தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த இரு ரெயில்களையும் தினசரி ரெயில்களாக இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.




Next Story