மழை பாதிப்பு குறித்து முதல் அமைச்சருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் பேச்சு


தமிழக முதல் அமைச்சர் , சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

சென்னை,

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து தொலைபேசி வாயிலாகக் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை அனுப்பிவைக்க முதல்- அமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது, தமிழக முதல் அமைச்சர் , சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார். உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story