சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு


சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு
x

சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே. சிங் ஆய்வு செய்தார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து ரூ.2,467 கோடியில் 2,20,972 சதுர மீட்டா் பரப்பில் அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய முனையம் அமைக்கும் பணி 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமா் மோடி, காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

இந்த பணிகள் 2 கட்டங்களாக செய்ய முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட பணியில் 6 அடுக்கு மல்டி லெவல் காா் பாா்க்கிங், நவீன வசதிகளுடன் வருகை, புறப்பாடு முனையம் ஆகியவைகளும் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனை, குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை ஆகியவைகளுக்கான விசாலமான கூடங்கள், கூடுதல் கவுண்ட்டா்கள், வி.வி.ஐ.பி.களுக்காக ஓய்விடங்கள், பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன.

இந்த முதல் கட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் நவீன வசதிகளுடன் கூடிய முதல் கட்ட புதிய முனையங்களை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங், திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் புதிய நவீன முனையத்தை ஆய்வு செய்தாா். அப்போது அதிகாரிகளிடம் சில விளக்கங்களை கேட்டு அறிந்தாா். பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினாா். அவருடன் விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உள்பட அதிகாரிகள் சென்றனர்.

இந்த புதிய முனையத்தின் திறப்பு விழா இந்த மாதம் இறுதிக்குள் நடைபெறும். இந்த புதிய முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் தற்போது பயன்பாட்டில் உள்ள பன்னாட்டு வருகை முனைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கும். அதன் பிறகு 2-ம் கட்ட கட்டுமான பணி தொடங்கப்படும்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வரும் 2024-ம் ஆண்டு டிசம்பரில் 35 கோடியாக இருக்கும். தற்போது பயணிகள் எண்ணிக்கை 17 கோடியாக உள்ளது என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story