வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் 600 போலீசார் பாதுகாப்பு


வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூர் கோவிலில் 600 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 8 Jun 2022 7:05 AM GMT (Updated: 8 Jun 2022 8:08 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு சர்ப்ப காவடி எடுத்து வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. இந்த திருவிழா 11.06.2022 அன்று முதல் 13.06.2022 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவில் பக்தர்கள் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

வாகனங்கள் நிறுத்துமிடம், கடற்கரைப் பகுதிகள், மற்றும் கோவில் வளாக சுற்று வட்டாரப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குற்ற செயல்களை தடுப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் யாரும் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story