வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் - உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் விலங்குகள் பாதிப்பு


வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம் - உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் விலங்குகள் பாதிப்பு
x

வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உரிய நேரத்தில் உணவு கிடைக்காமல் விலங்குகள் பாதிப்புக்குள்ளானது.

செங்கல்பட்டு

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பூங்காவில் பணிபுரியும் 219 தினக்கூலி பணியாளர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்கு வந்தபோது பூங்கா நிர்வாகம் பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையில் வருகையை பதிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

இதற்கு தினக்கூலி பணியாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பூங்காவில் 15 ஆண்டு காலமாக பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக அமர்த்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூங்கா நுழைவாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்கா நிர்வாகம் சார்பில் முதல் நாளில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் சரியான உடன்பாடு ஏற்படாததால் நேற்று முன்தினம் தினக்கூலி பணியாளர்களின் போராட்டம் மாலை 6.30 மணி வரை நீடித்தது.

இதனையடுத்து அனைவரும் கலைந்து வீட்டுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தினக்கூலி பணியாளர்கள் பூங்காவுக்கு வேலைக்கு வந்தபோது அதிகாரிகள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறினர். இதனால் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக தினக்கூலி பணியாளர்கள் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணியளவில் பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது உங்கள் சார்பாக கோரிக்கைகளை அலுவலகத்தில் வந்து பேசுமாறு பூங்கா துணை இயக்குனர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று கொண்ட தினக்கூலி பணியாளர்கள் போராட்ட குழுவில் இடம் பெற்ற 13 பேர் கொண்ட குழுவினர், துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்ட குழுவினர் நிரந்தரமாக பயோமெட்ரிக் வருகை பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பூங்கா அதிகாரிகள் அதற்கு பயோமெட்ரிக் முறை மட்டுமே இனி வருங்காலங்களில் கடைபிடிக்கப்படும் என்றும், அதனை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தினக்கூலி பணியாளர்களிடம் தெரிவித்தனர். மற்ற 8 கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

இதற்கு பேச்சுவார்த்தை குழுவினர் எதிர்ப்பு தெரிவித்னர். அவர்கள் தொடர்ந்து நேற்று மாலை 6 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். தினக்கூலி பணியாளர்களின் போராட்டம் காரணமாக குறைவான எண்ணிக்கையில் உள்ள பூங்கா நிரந்தர பணியாளர்கள் மூலம்

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளுக்கு சரியான நேரத்திற்கு உணவுகள் வழங்க முடியவில்லை. இதனால் பூங்காவில் உள்ள விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் பூங்காவில் விலங்குகள் இருப்பிடங்கள், கூண்டுகள், பூங்கா வளாகம் போன்ற பகுதிகளில் அன்றாட பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பூங்கா வளாகத்தில் தினக்கூலி பணியாளர்களின் போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story