மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை


மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 30 Sep 2023 7:30 PM GMT (Updated: 30 Sep 2023 7:30 PM GMT)

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்
வடவள்ளி


மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதால் மலைப் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப் பட்டு உள்ளது.


மருதமலை கோவில்


கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முருக பெருமானின் 7-வது படை வீடு என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.


இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். குறிப்பாக விஷேச நாட்கள் மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தார்ச் சாலை அமைக்கும் பணி, பார்க்கிங் பகுதியில் கழிவறை, லிப்ட் வசதி உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.


5-ந் தேதி முதல் தடை


இதனால் மலைக்கு மேல் கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாத நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் அதிகம் வரும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.எனவே அங்கு பணிகள் நடைபெறுவதையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் ஒரு மாதம் வரை அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.


மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைப்படி வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.



Next Story