விராட் கோலி ஒரு கிரிக்கெட் அதிசயம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


விராட் கோலி ஒரு கிரிக்கெட் அதிசயம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 15 Nov 2023 1:10 PM GMT (Updated: 15 Nov 2023 1:31 PM GMT)

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

உலகக்கோப்பை தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதியில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்துடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி 117 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது 50-வது சதத்தை விராட் கோலி பூர்த்தி செய்தார்.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் தெண்டுல்கர் 49 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இந்த நிலையில் விராட் கோலி 50-வது சதமடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார். 279 ஒருநாள் இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி தனது 50-வது சதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தை நேரில் கண்டு களித்து வரும் சச்சின் தெண்டுல்கர் முன்னிலையில் அவரது சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 50 சதம் அடித்து சாதனை படைத்துள்ள விராட் கோலிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நம்பமுடியாத சாதனை! 50 ஒருநாள் சதங்கள்! விராட் கோலி, நீங்கள் ஒரு கிரிக்கெட் அதிசயம். உலகக்கோப்பை அரையிறுதியில் உங்கள் அபார சாதனைக்கு வாழ்த்துகள்!" என்று தெரிவித்து உள்ளார்.



Next Story