வெங்கல் அருகே ரத்தக்காயத்துடன் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


வெங்கல் அருகே ரத்தக்காயத்துடன் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x

வெங்கல் அருகே ரத்தக்காயத்துடன் வெல்டர் பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள மூலக்கரை கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் நெற்றி, உதடு, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவலறிந்த வெங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் பூவரசன் (வயது 24) என்பதும் திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்த இவருக்கு பிரியா என்ற மனைவியும் 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பூவரசன் ராமதண்டலம் கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருவள்ளூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் மூலக்கரை கூட்ரோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பூவரசனின் மனைவி பிரியா தனது கணவர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்? என்றும் கொலையாளிகளை பிடிக்க கோரி வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறனர்.


Next Story