ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது


ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
x

கோப்புப்படம் 

நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

பென்னாகரம்,

கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

பாதுகாப்பு கருதி இந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்ததால் இன்றுகாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து 70 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது.

ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

காவிரி கரையோரம் போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Next Story