மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

பூண்டி ஏரியின் மதகுகளில் சீரமைப்பு பணி நடைபெற உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைக்கப்படும். இந்த தண்ணீர் தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி., ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

அதன்பின்னர் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் 8-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 29.11 அடி ஆக பதிவாகியது. 1.542 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடந்த மே மாதம் 8-ந் தேதி முதல் நேற்று காலை வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2.673 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உள்ளதாலும், பூண்டி ஏரியின் மதகுகள் சீரமைக்க உள்ளதாலும் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசை கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 32 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.


Next Story