"கொளத்தூருக்கு வந்தாலே உற்சாகமும், மகிழ்ச்சியும் வந்துவிடும்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கொளத்தூருக்கு வந்தாலே உற்சாகமும், மகிழ்ச்சியும் வந்துவிடும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

ஏழைகளின் முகத்தில் மலர்ச்சியை காணும் வகையில் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

சென்னை கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கொளத்தூர் தொகுதிக்கு வந்ததும் உற்சாகமும், மகிழ்ச்சியும் வந்துவிடும். தொடர்ந்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து என்னை தேர்ந்தெடுத்து வருகிறீர்கள். ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்காமல் தொடர்ந்து என்னை வெற்றி பெற செய்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களை சந்திக்கும் போது மகிழ்ச்சி தானாக வந்துவிடும். சில நேரங்களில் சோர்வு ஏற்பட்டால், கொளத்தூர் தொகுதி வந்தால் சரியாகி விடும். கொளத்தூர் தொகுதி மக்களை சந்தித்தால் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் வந்துவிடும்.

அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சென்னையில் குடிசைகள் அதிகமாக இருந்தது. ஆகவே ஆங்காங்கே மழை பெய்தால் மக்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார்கள். வெயில் காலத்திலும் வெயிலை தாங்க முடியாமல் தீப்பற்றக் கூடிய சூழல் ஏற்பட்டது அல்லது சமையல் செய்யும் நேரத்தில் எதிர்பாராத விபத்தில் தீ விபத்து ஏற்பட்டு குடிசைகள் எரித்தது. இதை எப்படி சரி செய்வது என அண்ணா யோசித்து வீடுகள் எரியாத வகையில் ஆஸ்பாட்டா ஷீப் போடப்பட்டது. மீண்டும் மழை பெய்யும் போது மக்கள் சிரமம் அடைந்தனர்.

அதன்பின் குடிசைமாற்று வாரியத்தை முதல் முறையாக ஏற்படுத்தியது கருணாநிதி தான். குடிசைகளை அகற்ற வேண்டும் என்பதற்காக குடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது அத்திட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய குடியிருப்புகளை திறந்து வைக்கும் நிகழ்வில் மக்கள் முகங்களில் மகிழ்ச்சியை, மலர்ச்சியை பார்க்கிறேன்.

வீடு என்பது ஒவ்வொருவரின் கனவு. அதை நிறைவேற்றுவதில் நாங்கள் இருந்துள்ளோம் என்பது நிறைவாக இருக்கிறது. குடிசையை மாற்றி கட்டடம் கட்ட வேண்டும் என்பது மட்டும் நோக்கம் அல்ல. நகர்புற மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும், வாழ்க்கை தரமும் மேம்பட வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.

சில மாநலங்களில் பெரிய விழா நடைபெறும் போது, வெளிநாட்டில் இருந்து தலைவரை அழைந்து வந்து அவர்களுக்கு குடிசைகள் தெரியக்கூடாது என தார்ப்பாய்களை போட்டு மறைக்கும் நிலை இருக்கிறது. நம் மாடல் மறைக்கும் மாடல் அல்ல, திராவிட மாடல். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் அண்ணா.

அடுத்து வந்த கலைஞர் ஏழையின் சிரிப்பில் அண்ணாவை காண்போம் என்றார். இப்போது ஏழையின் சிரிப்பில் கலைஞரை காண்போம் என்பது தான் என் உணர்வு. ஏழைகளின் முகத்தில் மலர்ச்சியை காணும் வகையில் திட்டங்களை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story