கொருக்குப்பேட்டையில் கால்வாய் தூர்வாரும்போது பொக்லைன் எந்திரம் மோதி 4 வீடுகள் சேதம்


கொருக்குப்பேட்டையில் கால்வாய் தூர்வாரும்போது பொக்லைன் எந்திரம் மோதி 4 வீடுகள் சேதம்
x

கொருக்குப்பேட்டையில் கால்வாய் தூர்வாரும்போது 4 வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதி 2 வீடுகளின் சுவர் இடிந்ததுடன், மேற்கூரையும் சரிந்து விழுந்தது.

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 5-வது தெரு அருகே சென்னை மாநகராட்சி மூலம் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரம் மூலம் கால்வாயில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

அப்போது கால்வாய் அருகில் இருந்த 4 வீடுகள் மீது பொக்லைன் எந்திரம் மோதியது. அதில் 2 வீடுகளின் சுவர் இடிந்ததுடன், மேற்கூரையும் சரிந்து விழுந்தது. மேலும் 2 வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தின் டிரைவரை முற்றுகையிட்டு தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், 47-வது வார்டு கவுன்சிலர் மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் முற்றுகையை கைவிட்டனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்து, அவர்களுக்கு அரிசி, பருப்பு, வேட்டி, சேலைகளை வழங்கினர். மேலும் பாதிக்கப்பட்ட இந்த வீடுகளுக்கு நிவாரணம் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தனர்.


Next Story