4 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்..?


4 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு பொருந்தும்..?
x
தினத்தந்தி 13 March 2024 10:10 PM GMT (Updated: 14 March 2024 7:30 AM GMT)

4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு, அது யார் யாருக்கு பொருந்தும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்த அரசாணை வெளியிடப்பட்டு, அது யார் யாருக்கு பொருந்தும்? என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசுப் பணியாளர்களுக்கு 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 1-1-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அகவிலைப்படியை 4 சதவீதம் கூடுதல் உயர்வு அளித்து அரசு ஆணையிடுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை, மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிடும்போது, 50 காசு அல்லது அதற்கு மேல் இருக்கும்போது அதை ஒரு ரூபாயாக கணக்கிட வேண்டும்.

இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர பணியாளர்களுக்கும், சில்லரைச் செலவு நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

இந்த அகவிலைப்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்பப் பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப் படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும் வழங்கப்படும்.

மேலும், ஊதிய அட்டவணையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய்த்துறையில் உள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story