பாழடைந்த சுகாதார நிலைய கட்டிடம் பராமரிக்கப்படுமா?


பாழடைந்த சுகாதார நிலைய கட்டிடம் பராமரிக்கப்படுமா?
x
தினத்தந்தி 26 Sep 2022 6:45 PM GMT (Updated: 26 Sep 2022 6:45 PM GMT)

செஞ்சி அருகே பாழடைந்த சுகாதார நிலைய கட்டிடம் பராமரிக்கப்படுமா?

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி அருகே உள்ள வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சேவூர் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதன் மூலம் மேல்சேவூர் ஊராட்சிக்குட்பட்ட கல்லேரி, கல்லாங்குளம், செங்கமேடு உள்ளிட்ட 7 கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஆலோசனை வழங்குவது, பிரசவம் மற்றும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த துணை சுகாதார நிலையம் பராமரிப்பின்றி பாழடைந்த கட்டிடம் போல காட்சி அளிக்கிறது. மேலும் இங்குள்ள வளாகத்தில் பாம்பு, பூரான், தேள் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து இருப்பதாகவும் சில நேரங்களில் இவை அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்துவதாகவும் இங்கு வரும் நோயாளிகள் புகார் தொிவிக்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, இந்த துணை சுகாதார நிலையத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் மற்றும் முதல் உதவி சிகிச்சை மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய அளவிலான நோய்களுக்கு சிகிச்சை பெற வேண்டுமானாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற வேண்டுமானாலோ 7 கிலோ மீட்டர் தொலையில் உள்ள கீழ்மாம்பட்டு ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கோ அல்லது 18 கிலோ மீட்டர் தொலையில் உள்ள செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கோதான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்படி செல்லும் போது சிலர் வழியிலேயே உயிரிழக்கும் சம்பவமும் அரங்கேறி உள்ளது. எனவே இந்த துணை சுகாதார நிலையத்தை பராமரித்து அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் துணை சுகாதார வளாகத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story