துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன்: மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை


துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன்: மணல் குவாரியில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை
x

துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினருடன் கரூர் மணல் குவாரியில் நேற்று மீண்டும் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரூர்

மணல் குவாரிகள்

கரூர் மாவட்டம், நன்னியூர்புதூர் மற்றும் மல்லம்பாளையம் ஆகிய 2 இடங்களில் காவிரி ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டது. நன்னியூர் புதூர் மணல் குவாரி ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் சில காரணங்களுக்காக மூடப்பட்டது. ஆனால் மல்லம்பாளையம் மணல் குவாரி தொடர்ந்து செயல்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் 12-ந்தேதி சென்னை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் நடந்த அமலாக்கத்துறை சோதனை காரணமாக மல்லம்பாளையத்தில் செயல்பட்ட மணல் குவாரி நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு மணல்குவாரி செயல்படவில்லை.இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி நன்னியூர்புதூர் மற்றும் மல்லம்பாளையம் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டுள்ளதா? என கணக்கிடும் பணியிலும் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

மீண்டும் சோதனை

இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் 2 கார்களில் வந்த 5-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறையினர் மீண்டும் நன்னியூர்புதூர் காவிரி ஆற்றில் உள்ள மணல் குவாரியில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வரப்பாளையத்தில் உள்ள நன்னியூர்புதூர் அரசு மணல் கிடங்கிலும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களிடம் மணல் அள்ளுவது தொடர்பாக கேட்டறிந்தனர். சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story