மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதரமாக ஏற்றுக்கொள்ள முடியாது - ஐகோர்ட்


மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதரமாக ஏற்றுக்கொள்ள முடியாது - ஐகோர்ட்
x

மாஜிஸ்திரேட் முன்பு சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதாரமாக வைத்து தீர்ப்பளிக்க முடியாது என ஐகோர்ட் கூறியுள்ளது.

சென்னை,

வேலூர் மாவட்டம் திருப்பார்குட்டை பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், திருமணமாகி 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னப்பொண்ணு என்பவருடன் திருமணம் செய்யாமல் 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சொத்து விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்சினையால் சின்னப்பொண்ணு மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த சின்னப்பொண்ணு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம், சிவாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிவா தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஏ.டி.ஜெகதீஸ்சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் 3 சாட்சிகளும், 5 முக்கிய சாட்சிகளும் பிறழ் சாட்சிகளாகி விட்டதாகவும், சம்பவம் நடத்து 16 நாட்கள் கழித்து மாஜிஸ்திரேட் முன்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அரசு தரப்பு வாதத்தின் போது, சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டதற்காக மனுதாரரை விடுதலை செய்துவிட முடியாது எனவும், மனுதாரர் சிவாவின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் மருத்துவ சாட்சிகளையும் கவனத்தில் கொண்டே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிய நிலையில், பொதுவான சாட்சியங்களைக் கொண்டு குற்றத்தை நிரூபிக்க போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனவும் சாட்சியங்கள் மாஜிஸ்திரேட் முன்பு அளித்த வாக்குமூலங்களை மட்டுமே முக்கிய ஆதாரமாக வைத்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக கூறி சிவாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.


Next Story