ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த பெண் கைது
![ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த பெண் கைது ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த பெண் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/08/27/844836-chainflush01.webp)
ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் நகை பறித்த பெண்ணை கைது செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே ஜெயராம் நகரை சேர்ந்தவர் ஸ்ரீமன்நாரயணசாமி. இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 76). ஓய்வு பெற்ற ஆசிரியர். இந்தநிலையில் 38 வயதான பெண் ஒருவர் தனலட்சுமி வீட்டிற்கு வந்து தான் அரசு வேலை செய்வதாகவும், தனக்கு வீடு வாடகைக்கு வேண்டுமெனவும் கேட்டுள்ளார். அப்போது தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை நோட்டமிட்ட அந்த பெண் தான் வைத்திருந்த ஒரு விதமான ஸ்பிரேயை தனலட்சுமி முகத்தில் அடிக்க முயன்றுள்ளார். அதற்குள் அவர் திரும்பி விடவே அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தாலுகா போலீசார் அந்த பெண்ணிடம் இருந்த நகையை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.