கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி - 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்


கணவரின் குடிப்பழக்கத்தால் விரக்தி - 3 குழந்தைகளுடன் விஷம் குடித்த பெண்
x

அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கணவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட சின்னமணளி பகுதியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி அருள். இவரது மனைவி தேனாம்பாள் (27). இந்த தம்பதிக்கு நிதீஷ் குமார் (9), சித்ரு (7), புகழ்மதி (3) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அருளுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்த அருள், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சினை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கணவரின் குடிப்பழக்கத்தால் நிம்மதி இழந்த தேனாம்பாள் நேற்று மாலை தனது மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததுடன், தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

தேனாம்பாள் குழந்தைகளுடன் வீட்டில் மயங்கி கிடப்பதைக் கண்ட, அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story