பருத்தி செடிகளுக்கு உரமிடும் பணி தீவிரம்


பருத்தி செடிகளுக்கு உரமிடும் பணி தீவிரம்
x

அருப்புக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பருத்தி செடிகளுக்கு உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை, காந்திநகர், பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், ராமானுஜபுரம், செம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே உள்ள கண்மாய்களில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொடர் மழை காரணமாக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிரிட்ட பருத்தி, மக்காச்சோளம், உளுந்து, மொச்சை ஆகியவற்றின் செடிகளுக்கு உரமிடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக வந்ததால் விவசாய பணிகளை கால தாமதமாக தொடங்கி உள்ளோம்.

தற்போது அனைத்து விவசாய நிலங்களிலும் பயிரிட்டுள்ள பயிர்கள் செடிகளாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். விவசாயிகள் அதிகாலையில் எழுந்து பயிர்களுக்கு உரமிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வருகின்ற காலங்களிலும் தொடர்ந்து மழை பெய்தால் இந்த ஆண்டு விளைச்சல் அமோகமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story