மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

தென்காசியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

தென்காசி

தென்காசி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்த காளிமுத்து மகன் முத்துப்பாண்டி (வயது 18). கூலி தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான குடிநீர் தொட்டியில் தண்ணீர் வரும் பைப் துண்டு விழுந்துவிட்டது. அதனை எடுத்து தருமாறு முத்துப்பாண்டியை அவர் கூறியுள்ளார். இதனால் முத்துப்பாண்டி தொரட்டி போன்ற ஒரு கம்பை எடுத்துக் கொண்டு காம்பவுண்ட் சுவர் மீது ஏறி அந்த பைப் துண்டை எடுத்தார். ஆனால் அது வரவில்லை. இதனால் பக்கத்து வீட்டுக்காரர் வேண்டாம் நீ வந்துவிடு என்று கூறி விட்டார். உடனே முத்துப்பாண்டி காம்பவுண்டு சுவர் மீது இருந்து கீழே குதித்தார். அப்போது அவர் கையில் இருந்த கம்பு, அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மரில் பட்டுவிட்டது. இதனால் மின்சாரம் அவரது உடலில் பாய்ந்தது. முத்துப்பாண்டி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவர் வைத்திருந்த கம்பின் முன் பகுதியில் இருந்த பாகம் மின்சார டிரான்ஸ்பார்மரில் பட்டது. ஏற்கனவே அந்த கம்பு மழையில் நனைந்து இருந்ததால் மின்சாரம் அவரது உடலில் பாய்ந்துள்ளது. இதுகுறித்து தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்து போன முத்துப்பாண்டியின் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி முத்துப்பாண்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story