குடும்ப தகராறில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை - கடிதம் சிக்கியது


குடும்ப தகராறில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை - கடிதம் சிக்கியது
x

குடும்ப தகராறில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், கொண்டஞ்சேரி கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். இவர் திவ்யா (21) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திவ்யா நள்ளிரவில் எழுந்து பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கீழே விழுந்து கிடந்தார். அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இறப்பதற்கு முன்பு திவ்யா ஒரு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில், 'மாமா என்னை மன்னித்துக்கொள். எனக்கு வாழ பிடிக்கவில்லை. நீ வேலா வேலைக்கு சாப்பிடு. நான் இறந்தால் என் உடலை இங்கேயே புதைத்து விடு. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே காரணம் என்னை மன்னித்துவிடு' என கடிதம் எழுதி வைத்திருந்தார்.

மேலும், திவ்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.


Next Story