தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை...!


தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை...!
x

தக்கலை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி


குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள சரல் விளையை சேர்ந்தவர் செல்வின் சுனில்ராஜ் (வயது35). டெம்போ டிரைவர். இவரது மனைவி அஜிதா(26) பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை இல்லை.

கணவர் சுனில் ராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊர் வந்தவர் ஊரில் டெம்போ ஓட்டி வருகிறார். இவருக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. நேற்று இரவு வழக்கம்போல் இருவருக்குமிடையே சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை வெளியில் சென்ற கணவர் சுனில் ராஜ் 8 மணியளவில் மனைவியை செல்போனில் அழைத்துள்ளார். அப்போது அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை முயற்சித்தும் போனை எடுக்காததால் வீட்டிற்கு வந்து பார்க்கும்போது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கில் தொங்கிய நிலையில் நிற்பதை பார்த்து பக்கத்திலுள்ளவர்களின் உதவியுடன் தூக்கில் இருந்து கீழே இறக்கி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு அஜிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் பற்றி அறிந்த தக்கலை துணை சூப்பிரண்ட் கணேசன் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டார். மேலும் திருமணமாகி நான்கு வருடமே ஆகியுள்ளதால் பத்மனாபபுரம் சப்-கலெக்டர் விசாரணை மேற்கொண்டார்.

இச்சம்பவம் குறித்து அஜிதாவின் தந்தை பால்ராஜ் தக்கலை போலீசில் கொடுத்த புகாரில், என் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் செல்வின் சுனில் ராஜ், அவரது தாயார் சுசீலா ஆகியோர் கொடுமைபடுத்தியதாக கூறியுள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Next Story