மதுகுடிக்க பணம் தராததால் வாலிபர் அடித்துக்கொலை


மதுகுடிக்க பணம் தராததால் வாலிபர் அடித்துக்கொலை
x

மதுகுடிக்க பணம் தராததால் ஆத்திரத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதை தடுக்க வந்த அவருடைய தம்பியும் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.

சென்னை

கூட்டுக்குடும்பம்

சென்னை வில்லிவாக்கம் மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருடைய தம்பி பிரபாகரன் (27). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். தற்போது வாடகைக்கு வசிக்கும் சிறிய வீட்டில் போதிய வசதிகள் இல்லாததால் அருகில் உள்ள திருமலை நகரில் புதிய வீடு பார்த்து செல்ல இருந்தனர். இதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவில் அண்ணன்-தம்பி இருவரும் வீட்டில் இருந்த பொருட்களை மினி லாரியில் ஏற்றிக் கொண்டு புதிதாக பார்த்துள்ள வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அடித்துக்கொலை

அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், அண்ணன்-தம்பி இருவரையும் வழிமறித்து மது குடிக்க பணம் தரும்படி கேட்டனர். அதற்கு மணிகண்டன் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கும்பல், மணிகண்டனை கையால் சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த செங்கல்லை எடுத்தும் அவரது தலையில் கடுமையாக தாக்கினர். இதனை தடுக்க வந்த அவருடைய தம்பி பிரபாகரனையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தம்பி படுகாயம்

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய அவருடைய தம்பி பிரபாகரன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஐ.சி.எப். போலீசார், கொலையான மணிகண்டன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கொலை செய்த கும்பலை, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஹரிகரன், விக்னேஷ், அலெக்சாண்டர் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story