நம் சுயமரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்


நம் சுயமரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 20 March 2021 1:28 AM GMT (Updated: 20 March 2021 1:28 AM GMT)

உயிர் பிரிகிற வரையில் காவிரிக்காக போராடியவர் கருணாநிதி என்றும், இந்த தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

தஞ்சை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரத்தநாட்டில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

யார் துரோகம் செய்தது?

தஞ்சை கோட்டையில் கருணாநிதி கால்படாத இடமே இருக்க முடியாது. அப்படிப்பட்ட கருணாநிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்டா விவசாயிகளுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார் என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்களே உங்கள் நாக்கு அழுகிப் போய் விடும். யாரைப் பார்த்து அவ்வாறு பேசுகிறீர்கள்?.

காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்து 50 ஆண்டு காலம் காப்பாற்றியவர் கருணாநிதி. அந்த உரிமையை இப்போது மத்திய அரசின் ஜல்சக்தித்துறையிடம் அடமானம் வைத்திருக்கும் துரோகிதான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவர் கருணாநிதியை பார்த்து துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார். அவர் பேசலாமா?.

தீர்ப்பை பெற்று தந்தார்

கருணாநிதி அடிக்கடி சொல்வார். நான் பிறந்த ஆண்டு 1924-ம் ஆண்டுதான் காவிரி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 1968-ம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது, முதல்-அமைச்சராக இருந்த போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதெல்லாம் காவிரி உரிமைக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பது வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

காவிரி நடுவர் மன்றம் அமைக்க 1970-ல் இருந்து போராடி 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்தான் நம்முடைய தலைவர் கருணாநிதி. அந்த நடுவர் மன்றத்திற்கு இடைக்கால தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை பெற்றுத் தந்தவர். 2007-ல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பெற்றுத் தந்தவரும் கருணாநிதி தான்.

கவலைப்படவில்லை

2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்த அடியேன் உள்பட நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து, முக்கொம்பில் இருந்து கடலூர் வரை காவிரி மீட்புப் பயணம் நடத்தினோம். எனவே கருணாநிதியை பார்த்து தஞ்சை மண்ணுக்கு துரோகம் செய்துவிட்டார் என்று பேசுகிறார் என்று சொன்னால் இதை விட கொடுமை எதுவும் இருக்க முடியாது.

மேகதாது அணை கட்ட வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதமரைச் சந்தித்து போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு என்ன ஆபத்து என்பதை பற்றி கொஞ்சம் கூட இங்கிருக்கும் ஆட்சி கவலைப்படவில்லை.

காவிரி கரையில்...

எனவே காவிரிக் கரையில் பிறந்து, காவேரி மருத்துவமனையில் உயிர் பிரிகிற வரையில் காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி. தயவுசெய்து இப்படி எல்லாம் எடப்பாடி பழனிசாமி பேச கூடாது. அப்படி பேசினால் அவருடைய நாக்கு அழுகித்தான் போகும்.

சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் குறைக்கப்படும், பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கப்படும். மாணவர்கள் மற்றும் இளைஞர் நலன் அடிப்படையாக வைத்து அவர்கள் பெற்ற கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் உண்மையான விவசாயிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அத்தனை பேரும் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்ற உறுதிமொழிகள் எல்லாம் இங்கே வழங்கப்பட்டிருக்கிறது.

சுயமரியாதையை காப்பாற்றுவதற்கான தேர்தல்

இந்த தேர்தல், ஏதோ நாம் ஆட்சிக்கு வருவதற்காக நடக்கும் தேர்தல் அல்ல. இது நம்முடைய சுய மரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள். அதற்கு உதயசூரியன் சின்னத்திலும் - நம்முடைய கூட்டணி கட்சிகளின் சின்னங்களிலும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தேடித்தர வேண்டும். அதற்கு உங்களது வாக்குகளை எல்லாம் மறந்து விடாமல் சிந்தாமல் சிதறாமல் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களுக்கு அளித்து ஆதரவு தரவேண்டும்.

கருணாநிதி பிறந்த மண் இந்த மண். கருணாநிதி மறைந்து நம்மையெல்லாம் விட்டு பிரிந்து அண்ணாவின் பக்கத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். நாம் பெறும் வெற்றியை அவருடைய நினைவிடத்துக்கு சென்று வெற்றி மாலையாக சூட்ட வேண்டும். அதுதான் நாம் அவருக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். எனவே அந்த வெற்றியை பெற்றுத்தருவதற்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story