நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்போது ஆதரித்து விட்டு குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க வலியுறுத்துவதாக அ.தி.மு.க. சொல்வது பெரிய நாடகம்


நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்போது ஆதரித்து விட்டு குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க வலியுறுத்துவதாக அ.தி.மு.க. சொல்வது பெரிய நாடகம்
x
தினத்தந்தி 30 March 2021 5:27 AM IST (Updated: 30 March 2021 5:27 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்போது ஆதரித்து விட்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க வலியுறுத்துவதாக அ.தி.மு.க. சொல்வது பெரிய நாடகம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஜோலார்பேட்டை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜோலார்பேட்டையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தேவராஜி, ஆம்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வில்வநாதன், திருப்பத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நல்லதம்பி, வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகமது நயீம் ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாடாளுமன்றத்தில் ஓட்டு

தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக்கொண்டவர்கள் போல நடித்துக்கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

உண்மை நிலை என்னவென்றால், காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அ.தி.மு.க.வினர். அதேபோல ‘முத்தலாக்' தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் ஓட்டும் போட்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பெரிய நாடகம்

அதுமட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டம் சி.ஏ.ஏ. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர். ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில், அந்த சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம், வற்புறுத்துவோம் என்று தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை நீங்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க. பா.ம.க. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. மாநிலங்களவையில் அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.முத்துக்கருப்பன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஆர்.சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், ஆர்.வைத்திலிங்கம், ஏ.விஜயகுமார், விஜிலா சத்யானந்த் என்ற 10 பேர். ஒரே ஒரு பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ்.

அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் தான்

இந்த 11 பேரும் மத்திய அரசு கொண்டு வந்த சி.ஏ.ஏ. சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்த சட்டம் நிறைவேறிவிட்டது. தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் அதை எதிர்த்து வாக்களித்தார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தவர்கள் 125 பேர். அதை எதிர்த்தவர்கள் 105 பேர்.

இந்த அ.தி.மு.க., பா.ம.க.வை சேர்ந்த 11 பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இன்று நாடு முழுவதும் சிறுபான்மையினர் துன்பப்படுவதற்கு காரணம் இந்த அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் என்பதைப் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். எனவே எடப்பாடி பழனிசாமியும், டாக்டர் ராமதாசும்தான் இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

தொப்புள்கொடி உறவு

ஆனால், இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். அவ்வாறு நாடகம் போடும் அவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?. இந்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. பல முறை போராட்டம் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி ஜனாதிபதியிடம் கொடுத்திருக்கிறோம்.

எனவே, இப்போது நான் உறுதியாக சொல்கிறேன். நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது உறுதி. எனவே, நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சி.ஏ.ஏ. சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். இது ஸ்டாலின் தரும் உறுதிமொழி. சிறுபான்மையினருடனான உறவு என்பது தி.மு.க.வின் தொப்புள்கொடி உறவு. எனவே எப்போதும் சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக தி.மு.க. குரல் கொடுக்கும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்

அதேபோல, நாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே 3 வேளாண் சட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தீர்மானத்தைத்தான் போடப்போகிறோம்.

இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான தேர்தல் என்பதையும் மறந்து விடக்கூடாது.

நாம் இழந்திருக்கும் மாநில உரிமையைக் காப்பாற்ற, நீங்கள் எல்லாம் நம்முடைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
1 More update

Next Story