கொரோனா வைரஸ் பாதிப்பு; கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி


கொரோனா வைரஸ் பாதிப்பு; கட்டுப்பாடுகளை நாடு முழுவதும் நீட்டித்தது இத்தாலி
x
தினத்தந்தி 10 March 2020 6:27 AM GMT (Updated: 10 March 2020 6:27 AM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளை இத்தாலி அமல்படுத்தியுள்ளது.

ரோம்,

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை, இத்தாலியில் 463 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70-க்கும் அதிகமானவர்கள்  கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியாகி உள்ளனர். 9,000-க்கும் அதிகமானவர்கள்கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்,  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் கியூசெப்பே கோன்ட்டே அறிவித்துள்ளார்.  இதன் மூலம் இத்தாலியில் வசிக்கும் மக்கள் உடல்நலம், அவசர வேலை தவிர பிற காரணங்களுக்காக தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக இத்தாலி முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.


Next Story