கொரோனா உயிரிழப்புகளை குறைக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு


கொரோனா உயிரிழப்புகளை குறைக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 8:07 PM GMT (Updated: 1 Oct 2021 8:07 PM GMT)

கொரோனா உயிரிழப்பு மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்தை 50 சதவிகிதம் குறைக்கும் வகையிலான மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளன.

அஸ்ட்ரா ஜெனகா, மார்டனா, ஜான்சன் அண்ட் ஜான்சன், பைசர், ஸ்புட்னிக் வி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக நல்ல பலனை தந்ததையடுத்து அந்த தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பதையும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதையும் குறைக்கும் மாத்திரையை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

மெல்னுஃப்ரவிர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரையை அமெரிக்காவின் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இந்த மாத்திரை கொரோனா வைரஸ் பரவியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும், வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 50 சதவிகிதம் தடுப்பதாக முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்த மாத்திரை சிறப்பாக செயல்படுவதும், டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராகவும் இந்த மாத்திரை சிறப்பாக செயல்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த மாத்திரையை உட்கொண்டு ஆய்வில் பங்கேற்ற அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா உயிரிழப்பு மற்றும் சிகிச்சை எண்ணிக்கையை 50 சதவிகிதம் குறைக்கும் வகையில் மெல்னுஃப்ர்விர் மாத்திரை நல்ல பலனை தருவது வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Next Story