இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; இந்திய சமூகத்தினர் நடத்த ஏற்பாடு


இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; இந்திய சமூகத்தினர் நடத்த ஏற்பாடு
x

இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர்.

லண்டன்,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அக்டோபர் 3-ந்தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதன்பின்னர், மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதன்படி, 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில், பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது. நிகழ்ச்சியை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க. முழு அளவில் தயாராகி வருகிறது.

இதேபோன்று, இங்கிலாந்தில் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சியை நடத்த இந்திய சமூகத்தினர் ஏற்பாடு செய்து உள்ளனர். இதுபற்றி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள மத்திய மந்திரி ஜிதேந்திரா சிங் கூறும்போது, மன் கி பாத் நிகழ்ச்சியானது அதற்கான தனித்துவம் வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது.

அரசின் தலைமை பதவி வகித்தவர்களில் மாதந்தோறும், இடைவெளி விடாமல் நாட்டு மக்களிடம் உரையாற்ற வேண்டும் என தேர்ந்தெடுத்து இருப்பது நமது வரலாற்றின் நினைவு பக்கத்தில் இதுவே முதன்முறையாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அவர் இதுவரை 100 தொடர்களை கடந்திருக்கிறார் என கூறியுள்ளார்.


Next Story