ரஷியாவில் இருந்து வெளியேற 15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் முயற்சி; இங்கிலாந்து அமைச்சகம்


ரஷியாவில் இருந்து வெளியேற 15 ஆயிரம் கோடீஸ்வரர்கள் முயற்சி; இங்கிலாந்து அமைச்சகம்
x

ரஷியாவில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் வெளியேறும் முயற்சியில் உள்ளனர் என இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.



லண்டன்,



உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர்.

இந்த போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன.

போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன.

போரானது நீண்ட காலத்திற்கு தொடர கூடிய சூழலும் காணப்படுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷியாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது.

ரஷியாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது என்று இங்கிலாந்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story