கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு


கானாவில் புதிய வகை வைரசுக்கு 2 பேர் உயிரிழப்பு
x

கானா நாட்டில் அதிக தொற்றும் தன்மை கொண்ட புதிய வகை வைரசின் பாதிப்புக்கு 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.



அக்ரா,



ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்புகளின் தீவிரமே இன்னும் குறையாமல் உள்ளது. அவ்வப்போது எபோலா உள்ளிட்ட வேறு சில வைரசின் பாதிப்புகளும் தோன்றி வருகின்றன.

இந்த சூழலில் எபோலா போன்று அதிக தொற்றும் தன்மை கொண்ட மார்பர்க் என்ற புதிய வகை வைரசின் பாதிப்பு 2 பேருக்கு ஏற்பட்டு உள்ளது என கானா சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்த மாத தொடக்கத்தில் கடந்த 10ந்தேதி இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், அதிக தொற்றும் தன்மை கொண்ட இந்த புதிய வகை வைரசின் பாதிப்புக்கு ஆட்பட்ட 2 பேரும் உயிரிழந்து உள்ளனர். அவர்கள் உயிரிழப்பதற்கு முன்பு மருத்துவனையில் சிகிச்சை பெறும்போது, காய்ச்சல், வயிற்று போக்கு, ஒவ்வாமை மற்றும் வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு இருக்கின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு செனிகல் நாட்டின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே, இதன் பாதிப்புகளை உறுதி செய்வது பற்றி பரிசீலிக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் மார்பர்க் வைரசின் பாதிப்பு தோன்றுவது இது இரண்டாவது முறை மட்டுமேயாகும். முதலில், கினியா நாட்டில் கடந்த ஆண்டு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன்பின்னர் வேறு யாருக்கும் பாதிப்பு அறியப்படவில்லை.

இதுபற்றி ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பு மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மொய்தி கூறும்போது, கானா நாட்டு சுகாதார அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு உள்ளனர். பாதிப்பு பரவுவதற்கு முன்பே தயாராகி உள்ளனர். இது நல்லது. ஏனெனில், உடனடி மற்றும் திட்டமிட்ட செயலை மேற்கொள்ளாவிட்டால் இந்த வைரசின் பரவல் கைமீறி போக கூடும் என தெரிவித்து உள்ளார்.


Next Story