மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 2 போலீசார் பலி


மெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு; 2 போலீசார் பலி
x
தினத்தந்தி 5 May 2019 11:00 PM GMT (Updated: 5 May 2019 6:50 PM GMT)

மெக்சிகோவில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் பலியாயினர். அங்கு தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

மெக்சிகோசிட்டி,

மெக்சிகோ நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது, வெராகுரூஸ் மாகாணம். அங்கு மினாடிட்லான் நகரில் ஒரு மதுபான விடுதி இயங்கி வந்தது. அந்த மதுபான விடுதியில் 3-ந் தேதி நள்ளிரவில் 2 மர்ம நபர்கள் நுழைந்து துப்பாக்கியால் சரமாரியாக சுடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

உடனே போலீஸ் படையினர் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அவர்களை நோக்கி அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். போலீசாரும் திருப்பிச்சுட்டனர். இரு தரப்பினர் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. அதன் முடிவில் அந்த மர்ம நபர்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஒருவர் பிடிபட்டார்.

இந்த மோதலில் 2 போலீசார் உயிரிழந்தனர். 6 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

பிடிபட்ட மர்ம நபரிடம் இருந்து 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

Next Story