சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா; பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடக்கம்


சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா; பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடக்கம்
x
தினத்தந்தி 15 Jun 2020 11:15 PM GMT (Updated: 15 Jun 2020 9:26 PM GMT)

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில் தலைநகர் பீஜிங்கில் மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

பீஜிங், 

சீனாவின் உகானில் தோன்றி ஒட்டுமொத்த நாட்டையும் 4 மாதங்களுக்கும் மேல் கட்டுக்குள் வைத்திருந்த ஆட்கொல்லி கொரோனா, கடந்த ஏப்ரல் மாதம் ஒருவழியாக சீனர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்தது. அவர்கள் மேற்கொண்ட தொடர் தடுப்பு நடவடிக்கைகளால் ஏப்ரல் இறுதிவாக்கில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் விட்டுப்போனது.

இந்த ஓய்வு நிரந்தரமாகி விடும், கொரோனாவில் இருந்து மீண்டு விட்டோம் என கருதியிருந்த அவர்களது எண்ணத்தில் தற்போது பேரிடி விழுந்து உள்ளது. நாடு முழுவதும் ஆங்காங்கே மீண்டும் கொரோனா நோயாளிகள் உருவாக தொடங்கி இருக்கிறார்கள்.

இதன் மூலம் கொரோனாவிடம் இருந்து சீனர்கள் பெற்றது நிரந்தர ஓய்வு அல்ல, வெறும் ஒரு இடைவெளி மட்டுமே என்பதை உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.

67 பேருக்கு கொரோனா

உண்மைதான்... கடந்த சில நாட்களில் சீனாவில் 67 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் 42 பேர் பீஜிங்கை சேர்ந்தவர்கள். அந்தவகையில் இந்த முறை தலைநகர் பீஜிங்தான் கொரோனாவுக்கு அதிக இலக்காகி இருக்கிறது.

நேற்று முன்தினம் வரை கண்டறியப்பட்ட இந்த புதிய கொரோனா நோயாளிகளில் 18 பேர் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து அறிகுறி இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்து உள்ளது.

பீஜிங்கை பொறுத்தவரை கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை மொத்தம் 499 பேர் உள்நாட்டு தொடர்பு மூலம் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 174 பேர் வெளிநாட்டில் இருந்து நோய்த்தொற்றுடன் வந்தவர்கள் என உள்ளூர் நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.

ஜின்பாடி சந்தை

பீஜிங் நகரில் உள்ள புகழ்பெற்ற ஜின்பாடி சந்தை கொரோனா தொற்றின் மையமாக தற்போது விளங்கி வருகிறது. அங்கிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதித்த போது இந்த உண்மை கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் அந்த சந்தை உள்பட நகரில் உள்ள 7 சந்தைகள் மூடப்பட்டு உள்ளன.

இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஜின்பாடி சந்தைக்கு சென்று வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு பரிசோதனை நடத்தும் நடவடிக்கைகள் மிகப்பெரும் அளவில் தொடங்கி உள்ளன. குறிப்பாக மே 30-ந் தேதிக்குப்பிறகு சந்தைக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு 29,386 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 12,973 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என கண்டறியப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியாக இருப்பதாக பிஜிங் சுகாதாரக்குழுவின் செய்தி தொடர்பாளர் காவோ ஜியாவோஜுன் கூறினார்.

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி இருப்பதால் அரசும், மருத்துவ நிபுணர்களும் கதிகலங்கிப்போய் உள்ளனர். சீனாவில் அக்டோபர் தொடங்கும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்கும் என கணித்திருந்த அவர்கள், தற்போதும் கொரோனா தனது கொடிய கரங்களை விரிப்பதை பார்த்து அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்.

எனினும் சுதாரித்துள்ள அவர்கள் பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக தலைநகர் பீஜிங்கில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா பரிசோதனைகளை (நியூக்ளிக் அமில சோதனை) மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

சீனாவில் நேற்றைய நிலவரப்படி 83,181 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 78,370 பேர் குணமடைந்து உள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,634 ஆகும்.

Next Story